திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.64 திருவேகம்பம் (காஞ்சிபுரம்) - திருத்தாண்டகம்
கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைந்த கோன்காண்
    குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
    கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
    நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
1
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
    பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
    தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்
    மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
2
நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
    நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்
    துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
    பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
3
தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
    தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
வாயவன்காண் வரும்பிறவு நோய்தீர்ப் பான்காண்
    வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
    திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
4
அடுத்தானை யுரித்தான் காண்(*)

(*) இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.
5
அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
    ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
    பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
    தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6
அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
    அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
    பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்
    கடலில்விட முண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
7
முடித்தவண்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
    வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
    பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
    முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
8
வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு
    வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
    வானகமும் மண்ணகமு மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்
    பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
9
வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
    வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்
    விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
    அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
10
அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
    ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்டகை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்
    திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
    பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.65 திருவேகம்பம் (காஞ்சிபுரம்) - திருத்தாண்டகம்
உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
    ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
    வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
    திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
1
நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
    இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
    குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்
    வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
2
பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
    புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்
    வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
    பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
3
பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
    பணிவிரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
    செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும்
    பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
4
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
    பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
    வானவர்கள் தாம்வணங்கும் மாமே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
    அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
5
ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்
    அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்
    கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர்
    பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6
உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
    உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்
    இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்
    தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
7
தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்
    தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
    ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
    வான்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
8
முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
    மூவிலைமேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
    தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
    சிவனவன்காண் செங்கண்மால் விடையோன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
9
பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்
    பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்
    சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
    எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் லரங்கொளிவாள் ஈந்தோன் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com